நான் இன்று வேலை முடித்து சரியாக 5.30 மணிக்கெல்லாம் Food City க்கு (வெளியில் சில பொருட்கள் இதை விட பாதிக்கு பாதி மலிவாக கிடைத்தாலும், எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால்) அவசரமாக சென்று இரவு உணவிற்கு தேவையான சில பண்டங்களை வாங்கிக்கொண்டு வெளியே வந்து ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுனரிடம் போய், என் வீடு இருக்கும் இடத்தை கூறிவிட்டு "கீயக்த ஓனே" (எவ்வளவு வேண்டும்) என்று கேட்டேன், அவன் 150 என சொல்லி ஒரு வழியாக பேரம் பேசி 120 ரூபாய்க்கு சம்மதித்து (பின்ன என்னங்க? இப்ப நாட்ல இருக்க விலைகள பார்கயில தலை சுற்றுது, 30 ரூபாய் மிச்சம் பிடிச்சால் எதற்காவது பயன்படுமுங்கோ) வண்டியில் ஏறினேன்.
.
நான் சிறு வயது முதல் சிங்களவர்களுடன் நெருக்கமானவன், என் வீட்டை சுற்றி இருப்பவர்களாகட்டும், எனக்கு படிப்பித்த ஆசிரியர்களாகட்டும், இப்படி இன்று வரை என்னை சுற்றி இருந்த அனைவரும் நல்லவர்கள் தான், மனிதம் என்ற ஒன்று எம்மை ஒன்றிணைக்கிறது அல்லவா? எனக்கு கொஞ்சம் கூட துவேசம் என்ற ஒன்று எப்போதும் கிடையாது, இனிமேலும் வராது.
.
சரி, இது தான் நடந்தது. நான் பேசும் சிங்களம் மிக துல்லியமாக இருக்கிறது என்று பல பேர் சொல்லி கேட்டிருக்கின்றேன், ஆனால் அது இன்று தான் எனக்கு மிகவும் நன்றாக விளங்கியது.
.
அந்து ஆட்டோக்காரன் என்னுடன் கொஞ்சம் கொஞ்சமாக பேசத்தொடங்கினான், முதலில், "மஹத்தயா, பலன்னகோ அத ரட்டே படுவள மில" (பாருங்கள் ஐயா இன்றைக்கு நாட்டில் விற்கும் பொருட்களின் விலையை), இனி எனக்கும் அவனுக்கும் இடையில் நடந்த சிங்கள உரையாடலை தமிழிலேயே எழுதுகின்றேன்.
.
ஆ.கா : இப்படி போய்க்கொண்டிருந்தால், என்ன நடக்குமோ தெரியவில்லை.
நான் : என்ன தான் செய்வது?
ஆ.கா : அப்டி இல்லை ஐயா, இந்த யுத்தம் இன்னும் கொஞ்ச நாளில் முடிந்து விடும் பாருங்கள், அதன் பிறகு எல்லாம் சரியாகிவிடும்.
நான் : ம்ம் (அரசியல் விஷயங்கள் பற்றி பெரிதாக நான் யாரிடமும் கதைக்க விரும்புவதில்லை, மிக நெருக்கமான நண்பர்களுடன் மட்டுமே விவாதிப்பேன்)
ஆ.கா : யாழ்ப்பாணத்தில் இருக்கும் மக்களில் யார் புலிகள், யார் நல்லவர்கள் என்றே புரியவில்லை. எல்லோரையும் போட்டு தள்ளினால் சரி. இந்த தமிழ் நாய்களால் தான் எல்லா பிரச்சினையும் எங்கள் நாட்டுக்கு.
நான் : மௌனம்.
.
இப்படி அவன் உரையாடல் தொடர்ந்து கொண்டே போனது. அவன் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் எவ்வளவு துவேசம் இருக்கிறது என்று உணர்ந்து கொண்டேன். இப்படியே என் வீட்டு முற்றம் வரை வந்தாயிற்று, நான் அவனுக்கு பணம் கொடுத்து இறங்க வேண்டிய நேரம். எனது பணப்பையை (wallet என்பதை பணப்பை என்று நண்பர் லோஷன் அவர்கள் எங்கோ எழுதியிருந்தார் - http://loshan-loshan.blogspot.com) திறந்து, அவன் முதலில் கேட்ட 150 ரூபாயை அவனிடம் கொடுத்து விட்டு, மிகுதியை நீயே வைத்துக்கொள் என்றேன், அவன் நன்றியுடன் என்னை பார்வையிட்டது போல் தோன்றியது. கடைசியாய் "மமத் தெமல தமாய்" (நானும் தமிழன் தான்) என்று கூறிவிட்டு, அவன் முகத்தை பார்க்காமல் வீடு வந்து சேர்ந்தேன் (திருவள்ளுவரின் வழியை பின்பற்றியதில் எனக்கு கொஞ்சம் பெருமை கூட - குறள் என்னவென்று உங்களுக்கு தெரியும்).இனிமேல் அவன் வேறு யாரேனும் தமிழர்களுடன் செல்லும் போது என்னை பற்றி நிச்சயம் நினைப்பான். .
இதை என் பக்கத்துக்கு வீட்டு சிங்கள நண்பருடன் பகிர்ந்து கொண்டேன். அவர், நல்ல வேலை செய்தாய், நானாக இருந்திருந்தால், உன்னை போல் சிலரால் தான் இந்த நாடு இரண்டு பட்டிருக்கிறது என்று கத்தியிருப்பேன் என்றார். 1983 பிரச்சினைகளின் போது இவர் வீட்டில் தான் நாங்கள் (என் குடும்பத்தில் 5 பேர், என்னுடன் சேர்த்து) ஒழிந்திருந்தோம். இன்றைக்கு நாங்கள் உயிருடன் இருக்கிறோம் என்றால் அதற்கு இவர் தான் ஒரு முக்கிய காரணம்.
.
செவி வழி வந்த ஒரு விடயத்தை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். 1956 களில் பண்டரநாயக்க அவர்கள் சிங்கள மொழி மட்டுமே இலங்கையின் உத்தியோகப்பூர்வ மொழி என்று பாராளுமன்றத்தில் அறிவித்தார், இதற்கு மாற்று கருத்து தெரிவித்த கொல்விநா த சில்வா அவர்கள் பின் வருமாறு தெரிவித்ததாக தெரிந்துகொண்டேன்.
.
"பாஷா தெக்காய், ரட்ட எக்காய்.. பாஷாவ எக்காய், ரட்ட தெக்காய்"
.
தமிழ்படுத்தினால்:
.
"பாஷை இரண்டு, நாடு ஒன்று..பாஷை ஒன்று, நாடு இரண்டு"
.
லங்கா சம சமாஜிய என்ற கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒரு தலைவர் இவர். இதன் உண்மைகளை கண்டறிய இந்த மனிதர் இன்று உயிருடன் இல்லை.
.
இதே வருடங்களில் நடந்த தேர்தல் நடவடிக்கைகளில் நடந்த மற்றொரு விடயத்தையும் (நான் கேள்விப்பட்ட விடயத்தையும், அப்போது நான் பிறக்கவே இல்லை) எழுதுகின்றேன்.
.
சுபாஷ் சந்திர போஸ் சங்கங்கள் போன்ற கட்சிகள் காணப்பட்ட நேரம் அது, அப்போது நேரு அவர்கள், இப்படி தமிழர்களின் கட்சிகள் தனித்தனியாக இருக்கக்கூடாது, எல்லாவற்றையும் ஒன்றிணைத்து ஒரு பெரிய கட்சியாக உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பலனாக, இலங்கை இந்திய தொழிலாளர் காங்கிரஸ் அமைக்கப்பட்டது, இதில் ஆரம்ப காலங்களில் வெவ்வேறு தலைவர்கள் இருந்தாலும் பின்னர் ஜனரஞ்சகமாக இருந்த தொண்டமான் அவர்களே தலைவரானார். அசீஸ் அவர்கள் இந்த கட்சியை விட்டு விலகியதன் பின்னர் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்டதாம். அப்போது நடந்த தேர்தல் பிரச்சாரங்களின் போது அசீஸ் அவர்கள் கூறினாராம் (என்னை மன்னியுங்கள், சில விஷயங்களை எழுதித்தான் புரியவைக்க முடியும்) "நான் இனி தொண்டமானை விட மாட்டேன், தொண்டமானின் கொட்டையை பிடிப்பேன்" (கோட்டையை என்று கூறுவதற்கு பதில் நா வழுக்கி (Tongue Slip) விட்டதாம்) என்று மேடையில் பேசியிருக்கிறார். அதற்கு சில நாட்களுக்கு பின் தொண்டமானின் மேடை பேச்சு: "எவனோ ஒருத்தன் வந்தானாம், என் கொட்டைய பிடிப்பேன்னு சொன்னானாம்" என்று கிண்டல் அடித்திருக்கிறார் (தோட்டப்புறங்களில் வாழும் அப்பாவி மக்களுக்கு இப்படி எல்லாம் பேசினால் ரொம்ப பிடிக்குமாம்) இது உண்மை சம்பவம். கற்பனை கதை அல்ல.
.
ஷொட்டு: பாராளுமன்றத்தில் கொல்விநா த சில்வா (Colvina De Silva) போன்றோர், நாடு எதிர் கொள்ளப்போகும் பிரச்சினைகள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, தமிழ் மக்களுக்கு தலைவர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டோர் எதை பற்றி பேசியிருக்கிறார்கள் என்று பாருங்கள்.
add to del.icio.us
saved by
0 users